மது குடித்ததை கண்டித்த விவசாயி வீட்டில் குண்டு வீச்சு
சிவகங்கை:சிவகங்கை அருகே மது குடித்ததை கண்டித்த விவசாயி வீட்டில், பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், நாலுகோட்டையை சேர்ந்தவர் பிரபுதேவா, 26. இவர், அக்., 1 இரவு, ரேஷன் கடை அருகே மது அருந்தினார். அவ்வழியாக சென்ற ராஜா, 25, என்பவர் அவரை கண்டித்தார். இதில், ராஜாவுக்கும், பிரபுதேவாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த ராஜாவின் தந்தையான விவசாயி நாராயணன், 70, பிரபு தேவாவை கண்டித்தார். இதில், ஆத்திரமுற்ற பிரபுதேவா, அவரது நண்பர் வடிவேலு, 25, ஆகியோர் அன்றிரவு ராஜா வீட்டுக்கு சென்று, அங்கிருந்த நாராயணனை வாளால் வெட்டிவிட்டு தப்பினர். நாராயணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிவகங்கை போலீசார், பிரபுதேவா, வடிவேலு மீது வழக்கு பதிந்து தேடினர். இந்நிலையில், அக்., 2 இரவு, மீண்டும் நாராயணன் வீட்டுக்கு சென்ற பிரபுதேவா, பெட்ரோல் குண்டை வீசி சென்றார். போலீசார், மதுரை அலங்காநல்லுாரில் பதுங்கியிருந்த பிரபுதேவாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.