திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் முறிந்த மரம்
திருப்புவனம்:திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று திடீரென மரம் முறிந்து விழுந்தது. யாரும் அந்த இடத்தில் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தின் முன்புறம், பக்கவாட்டில் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தினசரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சுற்று வட்டார கிராம மக்கள் பலரும் புகார் தரவும், விசாரணைக்காக, சான்று உள்ளிட்ட தேவைக்காக வந்து செல்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் மக்கள் அமர சிமென்ட் பெஞ்ச்கள் அமைக்கப்பட்டுள்ளன. புகார் தர வருபவர்கள் உள்ளிட்ட பலரும் அதில் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம். திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் குளிர்காற்று வீசி சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள வேம்பு மரத்தின் ஒரு கிளை அப்படியே முறிந்து சிமென்ட் பெஞ்ச் அருகில் விழுந்தது. மரம் முறிந்து விழுந்த போது யாரும் இல்லை. அந்த இடத்தில் டூவீலர்களை நிறுத்துவது வழக்கம் நேற்று காலை நேரம் என்பதால் யாரும் வரவில்லை, டூவீலர்களும் நிறுத்தப்படவில்லை. இதனால் எந்த வித உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படவில்லை.