சிறந்த திருநங்கை விருதுக்கு அழைப்பு
சிவகங்கை: முதல்வர் வழங்கும் சிறந்த திருநங்கை விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, ஏப்., 15 ல் திருநங்கைகள் தினம். திருநங்கைகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்து, முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் விதமாக 2025 ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது, முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதிற்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை, பாராட்டு சான்று வழங்கப்படும். தகுதியுள்ள நபர்கள் http://awards.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.அரசின் உதவியின்றி தனது வாழ்வை கட்டமைத்து இருக்க வேண்டும். திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தது 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவை பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி புரிந்த திருநங்கையாக இருத்தல் வேண்டும். திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இது குறித்து விபரங்களை பிப்., 10 ம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும், என்றார்.