காவிரி குடிநீர் திட்டகுழாய் சேதம்; வீணாக ஓடும் குடிநீர்
சிவகங்கை : சிவகங்கையில், மதுரை ரோட்டில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி அருகே காவிரி குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் 30லட்சம் லிட்டர் குடிநீர் சிவகங்கை நகராட்சி மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக காளவாசலில் உள்ள குடிநீர் தொட்டிக்கு குழாய் மூலம் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் மதுரை ரோட்டில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி நுழைவு வாயில் வழியாக செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. உடைந்த குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கோடையில் குடிநீர் வீணாகாமல் மக்களை சென்றடைய செய்ய வேண்டும்.