பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துாய்மை பணி
சிவகங்கை : சிவகங்கையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக ஊழியர்கள் புலம்புகின்றனர். சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் துாய்மை பணியை மேற்கொள்ள 57 நிரந்தர துாய்மை பணியாளர்களும், 71 ஒப்பந்த துாய்மை பணியாளர்களும் பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் பணியின் போது முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிகின்றனர். நேற்று காந்திவீதி, கோட்டை முனியாண்டி கோவில் அருகே செல்லும் கழிவு நீர் கால்வாயில் அடைப்புகளை சரி செய்யும் பணியை மேற்கொண்ட துாய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்தனர். சுகாதார ஆய்வாளர் கண்ணன் கூறுகையில், அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை பயன்படுத்துவதில்லை. ஆழமான கழிவுநீர் கால்வாய்களில் இயந்திரங்கள் பயன்படுத்தியே சுத்தம் செய்கிறோம் என்றார்.