மின்மோட்டாரை அலைபேசி மூலம் இயக்கும் கருவி வாங்க மானியம் கலெக்டர் தகவல்
சிவகங்கை : விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே மின்மோட்டார்களை அலைபேசி மூலம் இயக்கும் கருவி மானிய விலையில் வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, வேளாண்மை பொறியியல் துறை மூலம் இக்கருவி 98 வழங்க இலக்கு நிர்ணயித்து ரூ.7,000 அல்லது ரூ.5,000 வரை மானியம் வழங்க ரூ.6.86 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய மின் மோட்டார்களை வீட்டில் இருந்தபடியே இயக்கலாம். இந்த கருவி மூலம் அலைபேசி வழியாக இயக்கவோ, கண்காணிக்கவோ, நிறுத்தவோ முடியும்.ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு, பெண் விவசாயிக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிக பட்சம் ரூ.7,000 மானியம் வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு கருவியின் மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது ரூ.5,000 மானியம் உண்டு.இது தவிர புதிய மின்மோட்டார், பழைய மின்மோட்டாரை மாற்றுவதற்கும் ரூ.15,000 வரை மானியம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறையை அணுகவும், என்றார்.