பெயர் பலகை இல்லாத நான்கு வழிச்சாலையால் குழப்பம்
திருப்புவனம் வழியாக மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இதுதவிர கொச்சின் - - தொண்டி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதனை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. காளையார்கோவில்,திருவாடானை, தொண்டி,தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குற்றாலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் பலரும் பூவந்தி, சக்குடி வழியாக நான்கு வழிச்சாலைக்கு வந்து விரகனுார் ரிங் ரோடு சந்திப்பு வழியாக செல்கின்றனர். பூவந்தியில் இருந்து நான்கு வழிச்சாலை சந்திப்பு வரை ஒரு சில இடங்களில் பெயர் பலகைகளை இல்லை.நான்கு வழிச்சாலை சந்திப்பிலும் பெயர் பலகை இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் எந்த பக்கம் திரும்புவது என தெரியாமல் திணறுகின்றனர். பகல் நேரங்களில் விசாரித்து சென்று விடுகின்றனர். இரவு நேரங்களில் கூகுள் மேப்பை நம்பியே பயணம் செய்ய வேண்டியுள்ளது.கூகுள் மேப்பிலும் வேறு வேறு பாதைகளை காட்டுவதால் வெளியூர் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.எனவே நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் அனைத்து இடங்களிலும் பெயர் பலகை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.