உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

சிவகங்கை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி, காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் கொசு உற்பத்தியைத் தடுக்கவும், டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல், புளு காய்ச்சல், தண்ணீரால் பரவக்கூடிய டைபாய்டு, மஞ்சள் காமாலை ஹெப்படைடிஸ் A மற்றும் இதர தொற்று நோய்களை தடுப்பதற்கு சுகாதாரத்துறை, கிராம ஊராட்சிகள், நகராட்சிகள்,மாநகராட்சி அமைப்புகளுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் சளியுடன் கூடிய காய்ச்சல் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஒவ்வொரு வட்டாரத்திலும் தினந்தோறும் 3 இடங்கள், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒர் இடம் என்ற விகித்தில் தினசரி 38 சிறப்பு பருவகால சுகாதார மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.பருவமழை காரணமாக புளு காய்ச்சல், சளியுடன் கூடிய தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.அந்தப் பகுதிகளில் தொற்றுநோய் தடுப்புப் பணிகளும் நடைபெறுகிறது. இதுவரை 1,199 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களின் மூலமாக 45,492 நபர்களுக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு, சளியுடன் கூடிய காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.நவம்பரில் மட்டும் இதுவரை 285 ரத்த மாதிரிகள் மாவட்டம் முழுவதும் பரிசோதனை செய்ததில், 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதி, பணிபுரியும் பகுதிகள், பள்ளி வளாகங்களிலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளான கொசுப்புழு ஒழிப்பு பணிகள், புகைமருந்து அடித்தல், மருத்துவ முகாம், ஒட்டு மொத்த துப்புரவு பணிகள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய்த்தடுப்பு முன்தடுப்பு நடவடிக்கையாக டாக்சிசைக்ளின் மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. காய்ச்சல் கண்டவர்கள் சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவும், அரசு வழிகாட்டுதலின்படி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுவதை கடைப்பிடித்தல், கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் போன்ற நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை