நான்குவழிச்சாலை திட்டப் பணியில் குளறுபடி மேலும் 2 ஆண்டுகள் தாமதமாகலாம்
குன்றக்குடி: மேலுார்-காரைக்குடி நான்கு வழிச்சாலை திட்டப்பணியில் குளறுபடி குறித்து ஆய்வு நடப்பதால் பணி முடிவடைவதில் தாமதமாகும் என தெரியவந்துள்ளது. மேலுாரிலிருந்து காரைக்குடிக்கு தேசிய நெடுஞ்சாலையாக நான்கு வழிச்சாலை பிராமணம்பட்டி, காட்டாம்பூர், தென்மாப்பட்டு, தென்கரை, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, பாதரக்குடி வழியாக காரைக்குடி செல்கிறது. இதற்கான பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. பசுமைவழிச்சாலையாக அறிவிக்கப்பட்டு வயல், கண்மாய் வழியாகவே பெரும்பாலான சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள சில பாலங்கள், துாண்கள் திட்ட வரையறைப்படி இல்லை என்று கூறப் பட்டதை அடுத்து உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.சில கண்மாய் பகுதிகளில் கூடுதல் பாலம் அமைக்காமல் மண்ணை போட்டு ரோடு அமைக்கப்பட்டதிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் திட்ட வரைபடப்படி ரோடு அமையவில்லை. இது குறித்தும் தற்போது ஆய்வு நடந்து வருகிறது.மேலும் இந்த ரோட்டில் பிள்ளையார்பட்டி அருகே நான்கு வழிச்சாலையாக தஞ்சாவூருக்கு கைக்குரிச்சி வரையிலான சர்வே பணியும் தற்போது நடந்து வருகிறது. அடுத்த ஆண்டில் அந்தசாலைக்கான திட்டப் பணி துவங்கும் நிலையில், மேலுார்- - காரைக்குடி ரோட்டில் பல இடங்களில் உள்ள பலவீனப்பகுதிகளை ஆய்வில் கண்டுபிடித்து அதை சரி செய்த பின்னரே ரோடு பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.ரோடு சீரமைப்பு பணிகளுக்கு மேலும் இரு ஆண்டுகளாகி விடும் என்று கூறப்பட்டாலும், ஆய்வுப்பணி முழுமையடைந்த பின்னரே பணி முடிவடையும் காலத்தை சரியாக கணிக்க முடியும். முதலில் கொரோனா ஊரடங்கு, பின்னர் தொழிலாளர் பிரச்னை, அடுத்து கிராவல் தட்டுப்பாடு தற்போது திட்டப்பணியில் குளறுபடி என்று தொடர்ந்து இந்த ரோடு பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.