பதவி உயர்வு, கருணை அடிப்படை பணி கிராம உதவியாளர் சங்கம் வலியுறுத்தல்
சிவகங்கை,: தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை அரசு நிரப்புவதை வரவேற்கிறோம். அதே நேரம் பதவி உயர்வு, கருணை அடிப்படை பணி நியமனம் வழங்க வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.தமிழக அளவில் வி.ஏ.ஓ.,க்களின் கீழ் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் காலி பணியிடத்தால், வருவாய்த்துறை, அரசின் இலவச திட்டம், நில அளவை உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.ஒரே கிராம உதவியாளர் பல வி.ஏ.ஓ.,க்களுக்கு பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. மகளிர் உரிமை தொகை விசாரணை உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் கிராம உதவியாளர்களின்றி பாதிக்கப்படுகின்றன. இதை தவிர்க்கும் நோக்கில் தமிழக அளவில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் காலிபணியிடங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நிரப்பி கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை அனுமதித்துள்ளது. கிராம உதவியாளராக 40 ஆண்டு பணி
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் எஸ்.பி., ஷாஜஹான் கூறியதாவது: பணிச்சுமையை குறைக்கும் விதமாக காலிபணியிடம் நிரப்ப அறிவிப்பு செய்ததை வரவேற்கிறோம். அதே நேரம் கிராம உதவியாளராக 10 ஆண்டு பணி செய்த பின், அவர்களுக்கு வி.ஏ.ஓ., பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், தொடர்ந்து 30 முதல் 40 ஆண்டாக கிராம உதவியாளராகவே பதவி உயர்வின்றி பணிபுரிகிறோம்.அதே போன்று கருணை அடிப்படை பணி நியமனமே இல்லை. அரசின் அனைத்து இலவச திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சென்று, அரசுக்கு நற்பெயர் பெற்றுத்தரும் பணியில் ஈடுபடும் எங்களுக்கு, அரசு எந்தவித கருணையும் காட்டாதது அதிருப்தியை அளிக்கிறது. எனவே அரசு கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு, கருணை அடிப்படை பணி நியமனம் வழங்க வேண்டும் என்றார்.