திருப்புவனத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு
திருப்புவனம்: திருப்புவனத்தில் மீண்டும் மெல்ல மெல்ல சிறு வியாபாரிகள் ரோட்டை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் எந்த வித பயனும் இல்லை என மக்கள் கூறுகின்றனர்.போக்குவரத்து நெரிசல் மிக்க திருப்புவனம் நகரில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும், ஆனால் பத்தாண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றப்படவே இல்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலை சுருங்கி வாகனங்கள் சென்று வர முடியவில்லை. தினசரி போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மாணவர்கள் சேர முடியவில்லை. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கி தவித்தது.பலமுறை கோரிக்கை விடுத்ததையடுத்து ஆக்கிரமிப்பு ஜூன் 4ம் தேதி அகற்றப்பட்டது. தற்போது மெல்ல மெல்ல பலரும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டபடி சென்டர் மீடியன் அமைத்து ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.