கல்குவாரி அனுமதி ரத்து கிராம சபையில் தீர்மானம்
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வொன்றியத்தில் எஸ்.மாம்பட்டி ஊராட்சி தும்பைப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கிரானைட் கல் குவாரி செயல்படுகிறது. விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் இருப்பதாக கூறி இக்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எஸ்.மாம்பட்டி, சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று எஸ்.மாம்பட்டியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய பற்றாளராக சரவணக்குமார் பங்கேற்றார். ஊராட்சி செயலர் மகேஷ் தீர்மான நகல் வாசித்தார். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, தும்பைப்பட்டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.