தாயமங்கலத்தில் போதைப்பொருள் அதிகரிப்பு * புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா
இளையான்குடி : தாயமங்கலம் சுற்று வட்டார பகுதியில் 24 மணி நேரமும் மது,கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை தடுக்க தாயமங்கலத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது.இங்கு செவ்வாய்,வெள்ளி,ஞாயிறு போன்ற நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ஆடு,கோழி பலியிட்டு அம்மனை வேண்டி செல்வர். மேலும் பங்குனியில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் தாயமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தாயமங்கலத்திற்கு வந்து தான் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க வேண்டும். சில வருடங்களாக தாயமங்கலத்தில் 24 மணி நேரமும் மது, மற்றும் கஞ்சா தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் அவற்றை வாங்கி பயன்படுத்தும் இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் போதையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதையில் தாயமங்கலம் கோயிலுக்கு வரும் பக்தர்களிடமும் அடிக்கடி பிரச்னை செய்து வருகின்றனர். 4 நாட்களுக்கு முன்பு கூட கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்ற ஆட்டோ டிரைவரை கோயில் முன் 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர். போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தாயமங்கலத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாயமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.