சிவகங்கையில் கூடுதலாக 153 ஓட்டுச்சாவடிகள் ஆலோசனை கூட்டத்தில் தகவல்
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஓட்டுச்சாவடி சீரமைப்பு தொடர்பாக கலெக்டர் பொற்கொடி ஆலோசனை செய்தார். இதில் 1,200 ஓட்டுக்களுக்கும், 2 கி.மீ., துாரத்திற்கும் மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்கும் நோக்கில் புதிதாக 153 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) சட்டசபை தொகுதிகளில் 1,364 ஓட்டுச்சாவடிகள் உள்ள நிலையில், மேலும் 153 ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 1,517 ஓட்டுச்சாவடிகளாக அதிகரிக்கப்படும் என அனைத்து கட்சியினருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள ஓட்டுச்சாவடிகளுடன் காரைக்குடி - 39, திருப்புத்துார் - 33, சிவகங்கை - 37, மானாமதுரை - 44 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட உள்ளதாக சர்வ கட்சியினரிடம் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன், உதவி கமிஷனர் (கலால்) சிவபாலன், தேர்தல் தாசில்தார் மேசியதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.