கிருதுமால் நதியை காக்க வேண்டியது அவசியம்; முட்புதர்களை அகற்ற அக்கறை தேவை
திருப்புவனம்,: நான்கு மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் கிருதுமால் நதி முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காட்சியளிப்பதால் நீரோட்டம் இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து வரும் கிருதுமால் நதி தண்ணீரை நம்பி மூன்று மாவட்ட விவசாயிகள் உள்ளனர். மதுரை நகரின் ஒட்டு மொத்த சாக்கடை கழிவு நீர் கிருதுமால் நதியில் திறந்து விடப்படுவதால் கழிவு நீர் நதியாக மாறி வருகிறது. இதனையடுத்து மதுரை விரகனுார் மதகணையில் இருந்து வெள்ளக்கால்வாய் வெட்டப்பட்டு கிருதுமால் நதியில் இணைக்கப்பட்டு வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் போது கிருதுமால் நதியிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 80கி.மீ., துாரமுள்ள இந்த நதியில் 2013ல் ரூ.93 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் பொதுப்பணித்துறை மூலம் துார் வாரப்பட்டது. கிருதுமால் நதி மூலம் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி மூலம் 1 லட்சம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர். சிவகங்கையில் 11, விருதுநகரில் 31, ராமநாதபுரத்தில் 3 என 45 கண்மாய்கள் வரை பயன்பெறுகின்றன. விவசாய தேவை தவிர கிருதுமால் நதியில் நீர் திறப்பின் போது நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் கால்வாயில் ஆங்காங்கே கருவேல மரங்களும், நாணல்களும் வளர்ந்து தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட மழை காலங்களில் கூட மழை தண்ணீர் கிருதுமால் நதியில் செல்வதில்லை. தண்ணீர் விரைவாக செல்வதற்கு வசதியாக மதுரை விரகனூர் மதகு அணையில் இருந்து 5 கி.மீ., தூரத்திற்கு 55 அடி அகலத்தில் சிமென்ட் தொட்டியும் ரூ.3 கோடி செலவில் கட்டினர். ஆனால் அதிலும் கருவேல மரங்கள் வளர்ந்ததால் கால்வாய் முற்றிலும் சேதமடைந்து விவசாயமே கேள்விக் குறியாகி உள்ளது. கிருதுமால் நதியில் கருவேலமரங்கள் எனவே அரசு கிருதுமால் நதியை முழுமையாக துார்வாரி பராமரிக்க வேண்டும். கடும் வறட்சியில் தவிக்கும் விருதுநகர், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவேண்டும் என பல முறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கிருதுமால் நதி மூலம் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. நதியில் தண்ணீர் வராததால் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. நதி முழுவதும் கருவேல மரங்கள், நாணல்கள் வளர்ந்துள்ளதால், பன்றிகளும் கூட்டம் கூட்டமாக வசித்து விவசாயத்தை பாழாக்குகின்றன. எனவே கிருதுமால் நதியில் கருவேல மரங்கள், நாணல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.