டார்ச்சை அடமானம் வைத்த கமல் பா.ஜ.,எச். ராஜா சாடல்
காரைக்குடி:''ராஜ்யசபா சீட்டுக்காக டார்ச்சை தி.மு.க.,விடம் அடமானம் வைத்து விலை போய் விட்டார் கமல். இவரால் தமிழகத்திற்கு ஒரு லாபமும் கிடையாது'' என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் அவர் கூறியதாவது:ரிசர்வ் வங்கி, நகைக்கடன் தொடர்பாக விதித்த விதிமுறை மாற்றங்களை, வாபஸ் பெற்றுள்ளது. மதுரையில் ஸ்டாலின் நடத்தியது தான் உண்மையான ரோடு ஷோ. ஏனென்றால் மக்களே இல்லை. ரோடு தான் இருந்தது. மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தேச விரோதமாக பேசுவதை தி.மு.க.,வினர். வீரம் என்று நினைத்துக் கொள்கின்றனர்மத்தியில் 2004 முதல் 2014 வரை தி.மு.க., உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் ஆட்சியில் இருந்தது. அதுவரை 32 சதவீதம் தான் மாநிலத்திற்கு நிதி பகிர்மானம் வழங்கினர். பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வரியில் 42 சதவீதம் மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது. இஸ்ரோ ஏவுகணை சோதனை ஏன் நடத்த வேண்டும் என்று கேள்வி கேட்டவர்கள் தமிழகத்தில் உண்டு. டார்ச் லைட்டை வைத்து 'டிவி 'யை உடைத்த மானஸ்தன் எங்கே. சூரியன் இருக்கையில் டார்ச் லைட் எதற்கு என்று போய் விட்டார். கமல் ஊழலுடன் சமரசம் செய்ய மாட்டேன் என்றார். எல்லாம் பிதற்றல். மக்களை ஏமாற்ற கட்சி தொடங்கி, ராஜ்யசபா சீட்டுக்காக டார்ச்சை தி.மு.க.,விடம் அடமானம் வைத்து விலை போய்விட்டார். இவரால் தமிழகத்திற்கு ஒரு லாபமும் கிடையாது. இவர் தன்மானமற்றவர் என்று நிரூபணம் ஆகி உள்ளது என்றார்.