அனுமதியற்ற கட்டடங்கள் எதிரான வழக்கில் உத்தரவு
மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மீனாட்சிபுரம் முத்திருலு. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: திருப்புவனத்தில் சில தனியார் திருமண மண்டபங்கள் பேரூராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன. வாகன நிறுத்தும் வசதி இல்லை. வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது. தீ தடுப்பு சாதனங்கள் இல்லை. அச்சட்ட விரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முரளி ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கட்டட உரிமையாளர்களிடம் அரசு தரப்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. விளக்கத்தை பரிசீலித்து சட்டத்திற்குட்பட்டு 12 வாரங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.