மதகுபட்டியில் விளையும் ‛செண்டு மல்லி இயற்கை விவசாயத்தில் நடவு
சிவகங்கை: சிவகங்கை அருகே மதகுபட்டியில் தை மாதத்தில் அதிகம் விற்பனையாகும் செண்டு மல்லி பூ' விளைச்சல் அதிகரித்துள்ளது.மாவட்ட அளவில் இந்த ஆண்டு 1.95 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். இங்கு நெல் மட்டுமின்றி நிலக்கடலை, பருத்தி, மிளகாய் உள்ளிட்டவைகளும் விளைவிக்கப்படுகின்றன. சம்பங்கி, மல்லிகை, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களும் அதிகளவில் நடவு செய்து, மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்பி வருகின்றனர். சிவகங்கை அருகே மதகுபட்டியில் செண்டு மல்லி பூ (கஞ்சா பூ) விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். மதுரை மார்க்கெட்டில் கிலோ ரூ.100 முதல் 150 வரை விற்பதால், அதிகளவில் விவசாயிகள் செண்டுமல்லி பூக்களை மதுரைக்கு அனுப்பி வருகின்றனர். 40 நாளில் 200 கிலோ பூக்கள்
மதகுபட்டி விவசாயி பி.வெள்ளையன் கூறியதாவது, கிணற்று பாசனம் மூலம் 10 சென்ட் நிலத்தில் ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட செண்டு மல்லி பூ வீரிய ஒட்டுரக நாற்றினை நடவு செய்தேன். நடவு செய்து 60 நாட்களுக்கு பின் பூக்களை எடுக்கலாம். வாரத்திற்கு 2 முறை என்ற அடிப்படையில் 40 நாட்கள் வரை 200 கிலோ வரை செண்டு மல்லி பூ அறுவடை ஆகும். கெமிக்கல் உரமின்றி, ஆடு, மாட்டு சாணத்தை உரமாக பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் இப்பூக்களை வளர்த்துள்ளேன். இது மட்டுமின்றி இங்கு கோழிக்கொண்டை பூ, நாட்டு கத்தரி உள்ளிட்ட பலன் தரும் செடிகளையும் வளர்த்து வருகிறேன், என்றார்.