சரண் விடுப்புத்தொகையை வழங்க கோரி போராட்டம் * அரசு அலுவலர் ஒன்றியம் முடிவு
சிவகங்கை:சிவகங்கையில் தமிழக அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர் அருள்ராஜ் கூறியதாவது: சட்டசபையில் 2020 ம் ஆண்டு அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சரண்விடுப்பை நிறுத்தி வைத்ததை 2026 ஏப்.,1 முதல் பெறலாம் என பட்ஜெட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் 2025 ஏப்., முதல் பெறும் வகையில் முதல்வர் அறிவிப்பை திருத்தி வெளியிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏழாவது சம்பளக் குழு நிர்ணயித்தபடி 21 மாத நிலுவை தொகையை அரசு விடுவிக்க வேண்டும். இவை உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர், ஊராட்சி, நகராட்சி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்., 3 ல் மாநிலம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன் தர்ணா போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.