ரோட்டில் அரசியல், ஜாதி கொடி கம்பம் அகற்ற கெடு; 15 நாட்கள் கால அவகாசம் அளித்து உத்தரவு
சிவகங்கை : தேசிய, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி, ஜாதி சங்க கொடி கம்பங்களை 15 நாட்களுக்குள் தாங்களே முன்வந்து அகற்ற வேண்டும் என கட்சிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் கட்சி மற்றும் ஜாதிய அமைப்புகளை சேர்ந்த கொடி கம்பங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் 50 முதல் 100 அடி உயரத்திற்கு கொடி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மக்கள் கூடும் இடங்களில் கட்சியினர், ஜாதி மற்றும் சங்கங்கள் சார்பில் கொடி கம்பங்கள் நிறுவியுள்ளனர். எனவே அரசு மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சி, ஜாதிய, சங்க கொடி கம்பங்களை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கட்சிகளுக்கு எச்சரிக்கை
கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் அரசு மற்றும் பொது இடங்களில் நிறுவியுள்ள கட்சி, ஜாதிய, சங்க கொடி கம்பங்களை தானாகவே முன்வந்து அகற்றி கொள்ள மார்ச் 26 முதல் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த கட்சி, சங்கங்கள், ஜாதிய அமைப்புகள் தாங்கள் நிறுவிய கொடி கம்பங்களை அகற்றி கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் அரசே கொடி கம்பங்களை அகற்றி, அதற்குரிய செலவினங்களை அந்தந்த கட்சி, சங்கங்கள், ஜாதிய அமைப்புகளிடமே வசூலிக்கும் என தெரிவித்துள்ளார்.