மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
சிவகங்கை : ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைகளில் படிக்கும் பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைகளில் படிக்கும் பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் புதிய கல்வி உதவி தொகை மற்றும் கல்வி உதவி தொகைக்கு புதுப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இக்கல்வி உதவி தொகை வழங்கப்படும். இதற்கு மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். ஒரு மாணவருக்கு கற்பிப்பு கட்டணம், சிறப்பு, தேர்வு கட்டணம், இதர கட்டாய கட்டணமாக ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி தொகையாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆணையர், பிற்பட்டோர் நல இயக்கம், மிக பிற்பட்டோர், சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம், சென்னை 5 மற்றும் பிற்பட்ட, மிக பிற்பட்டோர் நல இயக்ககம் சென்னை, அந்தந்த மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தை https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிற கல்வி உதவி தொகை பெறுவோருக்கு, இத்திட்டம் பொருந்தாது. கல்வி உதவிக்கு புதுப்பித்தல் விண்ணப்பத்தை செப்., 30க்குள்ளும், புதிதாக கல்வி உதவி தொகை கோரும் விண்ணப்பத்தை அக்.,31 க்குள் ஒப்படைக்க வேண்டும், என்றார்.