அரசு விடுதியில் சமையலர்கள் பற்றாக்குறை
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள அரசு கல்லுாரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் போதிய சமையலர் இல்லா ததால் மாணவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவ, மாணவியர் விடுதிகள் 80 க்கும் மேற்பட்டவை உள்ளன. காரைக்குடியில் 3 மாணவர்கள் விடுதி, 2 மாணவிகள் விடுதி என 5 விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மேல் இருந்தால் 3 சமையலர்கள் இருக்க வேண்டும். ஆனால் இங்கு ஒரே ஒரு சமையலர் மட்டுமே உள்ளார். மேலும் துாரத்தில் உள்ள கல்லுாரியில் மாணவர்கள் படித்தால் விடுதிகளில் இருந்து மதிய உணவையும் எடுத்துச் செல்கின்றனர். இதனால் காலையிலேயே, காலை மற்றும் மதியம் என இரு வேளைக்கும் சேர்த்து உணவு தயார் செய்ய வேண்டியுள்ளது. உதவி யாளர்களும் இல்லை. ஒரே ஒரு சமையலர் மட்டுமே உள்ளதால் உணவு தயாரிப்பதில் சிரமம் நிலவு கிறது. இதனால் மாணவர்கள் முறையாக உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கும் அவலமும் நிலவி வருகிறது. தவிர, பள்ளி கல்லுாரி விடுதிகளில் துாய்மை பணியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமையலர்கள் நியமித்து மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்குவதோடு, மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருதி இரவு காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.