உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கேரளா செல்லும் சிங்கம்புணரி மாட்டுச்சாணம்

கேரளா செல்லும் சிங்கம்புணரி மாட்டுச்சாணம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் இருந்து லாரிகளில் கேரளாவுக்கு மாட்டுச்சாண எருக்களை அனுப்பி விவசாயிகள் வருமானம் பார்த்து வருகின்றனர்.இவ்வொன்றியத்தில் எஸ்.மாம்பட்டி, ஜெயங்கொண்ட நிலை, வடவன்பட்டி, ஏரியூர், மல்லாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ச்சியாக விவசாயம் பொய்த்து வருகிறது. சில இடங்களில் தண்ணீர் இருந்தும் பல்வேறு காரணங்களால் விவசாயம் நடைபெறவில்லை. இந்நிலையில் இப்பகுதி வீடுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இம்மாடுகளின் சாணத்தை அப்பகுதி மக்கள் சேகரித்து சிறிய எருவாக காய வைத்து கேரளாவுக்கு விற்று வருகின்றனர்.வாரத்திற்கு 5 முதல் 10 லாரிகள் இப்பகுதியில் வந்து சாணங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு மூடைக்கு 60 ரூபாய் வரை விலை கொடுக்கின்றனர். இதனால் வாரத்திற்கு 500 முதல் 1000 ரூபாய் வரை மாட்டுச் சானத்தை விற்பது மூலம் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் வருமானம் கிடைக்கிறது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் சாண எருக்கள், கேரளாவில் தேயிலை தோட்டங்களுக்கும், விபூதி, சாம்பிராணி உள்ளிட்டவை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.இப்பகுதியிலேயே சாண எருக்களை கொண்டு இயற்கை உரமாக பயன்படுத்தவும், விபூதி, சாம்பிராணி போன்ற தொழிற்சாலை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !