சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரியில் மீண்டும் ராகிங் புகாரால் சர்ச்சை டீன் தலைமையில் ஆலோசனை
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் 'ராகிங்' நடப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என 2 வது முறையாக மருத்துவ கவுன்சிலுக்கு புகார் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டீன் தலைமையில் ஆலோசனை நடந்தது.இங்கு ஆண்டுதோறும் 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., முடித்து செல்கின்றனர். முதுகலை மருத்துவ படிப்பிலும் படிக்கின்றனர். பெரும்பாலும் இக்கல்லுாரியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். விடுதி ஜூனியர் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் 'ராகிங்' செய்வதாக மருத்துவ கவுன்சிலுக்கு, இ- மெயில் மூலம் மாணவர்கள் புகார் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக இங்கு விசாரணை நடத்தி, 'ராகிங்' நடைபெறவில்லை என மாணவர்கள், பெற்றோரிடம் கையெழுத்து பெற்று அனுப்பினர்.ஏற்கனவே அனுப்பிய புகாரின் மீது சிவகங்கை மருத்துவ கல்லுாரி நிர்வாகம் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இங்கு மாணவ, மாணவிகளை 'ராகிங்' செய்வது தொடர்கிறது என இரண்டாவது முறையாக மருத்துவ கவுன்சிலுக்கு மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து டீன் சத்தியபாமா தலைமையில் 'ராகிங்' தடுப்பு கண்காணிப்பு குழுவினரின் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்ணன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், மகளிர் கல்லுாரி பேராசிரியை, பெற்றோர்கள் பங்கேற்றனர். விடுதி மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து, 'ராகிங்' ஆலோசனை கூட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். ஆனால் 'ராகிங்' யை தடுப்பதற்கான எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.