உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு மானியம்
சிவகங்கை : மாவட்டத்தில் 30 சதவீத மானியத்துடன் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரி முன்வரவேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: வேளாண் பட்டய மற்றும் பட்டம் முடித்த இளைஞர்களின் திறன் விவசாயிகளுக்கு உதவியாக இருந்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில் உழவர் நல சேவை மையங்கள் 1,000 வரை அமைக்க, அரசு ரூ.42 கோடி ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 முதல் 20 லட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீத மானியமாக ரூ.3 முதல் 6 லட்சம் வரை வழங்கப்படும். இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான மற்றும் நவீன தொழில்நுட்பம், வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற வயது 20 முதல் 45க்குள் இருப்பவர்கள், விரிவான அறிக்கையுடன் வங்கியில் கடன் பெற்ற விண்ணப்பிக்க வேண்டும். வங்கியில் கடன் ஒப்புதல் பெற்ற பின், மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை பட்டதாரிகள் பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.