பரமக்குடி-திருச்சி பஸ் திடீர் நிறுத்தம் பயணிகள் அவதி
மானாமதுரை : பரமக்குடியிலிருந்து மானாமதுரை வழியாக திருச்சிக்கு அதிகாலை இயக்கப்படும் அரசு பஸ் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.பரமக்குடியிலிருந்து அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு மானாமதுரை வழியாக திருச்சிக்கு அரசு பஸ் நீண்ட காலமாக சென்று வருகிறது.இந்த பஸ்சில் பார்த்திபனுார், மானாமதுரை, சிவகங்கை, ஒக்கூர், மதகுபட்டி, திருக்கோஷ்டியூர், திருப்புத்துார், புதுக்கோட்டை மற்றும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பயணிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் திருச்சி செல்ல வசதியாக இருந்தது.கடந்த சில மாதங்களாக இந்த பஸ் தினமும் இயக்கப்படாமல் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது 2 நாள் நிறுத்தப்படுவதால் இந்த பஸ்சை நம்பி காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர். முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் கூறியதாவது: அதிகாலையில் மானாமதுரை மார்க்கமாக சிவகங்கை, திருப்புத்துார்,புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்ல இந்த பஸ் வசதியாக உள்ளது. அதிகாலை 4:00 மணிக்கு மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தால் பெரும்பாலான நாட்கள் பஸ் வராமல் பயணிகள் மதுரை சென்று அங்கிருந்து திருச்சி செல்ல வேண்டிய நிலை உள்ளது.கால விரயம் ஆவதோடு கூடுதலாக செலவும் ஆகிறது. மாணவர்கள், அரசு ஊழியர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இந்த பஸ்சை அடிக்கடி நிறுத்தாமல் தினந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.