மேலும் செய்திகள்
பயிர் விளைச்சல் போட்டி விவசாயிகளுக்கு அழைப்பு
15-Dec-2024
சிவகங்கை: திருந்திய நெல் சாகுபடிக்கான மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் சிவகங்கை மாவட்ட விவசாயிகளும் பங்கேற்கலாம் என வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படும். இதில் மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை, தங்கப்பதக்கம் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் குறைந்தது 2 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் செய்த நெல் ரகங்கள் மட்டுமே பயிரிட்டிருக்க வேண்டும். நில உரிமையாளர், குத்தகைதாரர் போட்டியில் பங்கேற்கலாம். 50 சென்ட் அளவில் பயிர் அறுவடை செய்யப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை பரிசு பெற்ற விவசாயி அடுத்த 3 ஆண்டு போட்டியில் பங்கேற்க இயலாது. அறுவடை செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பே வட்டார வேளாண்மை உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இப்போட்டியில் பங்கேற்க அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம், என்றார்.
15-Dec-2024