காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர் அனுமதி
சிவகங்கை : மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் 84 வது நிறுவன (சி.எஸ்.ஐ.ஆர்.,) நாளினை முன்னிட்டு செப்., 26, 27ல் காரைக்குடி சிக்ரியில் அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர், பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன நாளை முன்னிட்டு, காரைக்குடியில் உள்ள சிக்ரியில் கண்டறியப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். இதற்காக செப்., 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர். காலை 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள், தொழிற்சாலை அலுவலர்கள், தொழில் முனைவோர் இலவசமாக பார்க்கலாம். மாணவர்களுக்கென அறிவியல் வினாடி வினா போட்டி நடத்தி பரிசு வழங்க உள்ளனர். ஏற்பாடுகளை காரைக்குடி சிக்ரி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.