தொழிற்கல்வி சார் திறன் கருத்தரங்கு
சிவகங்கை: சிவகங்கையில் அரசு பள்ளிகளில் செயல்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு தொழில் சார் திறன்களை வளர்ப்பது குறித்த கருத் தரங்கு நடந்தது. அரசு பள்ளிகளின் (தொழிற்கல்வி) இணை இயக்குனர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்படி, இம்மாவட்டத்தில் வேளாண், தணிக்கை மற்றும் கணக்கு மேலாண்மை, அடிப்படை மின்னியல், பொது இயந்திரவியல், அலுவலக மேலாண்மை மற்றும் செயலாண்மை பாடப்பிரிவுகளில் 306 மாணவர்கள் வரை படிக்கின்றனர். இம்மாணவர்களின் தொழில் சார் திறனை வளப்படுத்தி, வலுவூட்டும் நோக்கில் தொழிற்கல்வி உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர் களுக்கான கருத்தரங்கு நடந்தது. இக்கருத்தரங்கிற்கு முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து தலைமை வகித்தார். சி.இ.ஓ., பி.ஏ., முனியாண்டி, உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, ஒருங்கிணைப்பாளர் (தொழிற்கல்வி) ஜெஸிமா பேகம் பங்கேற்றனர். இக்கருத்தரங்கு மூலம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள தொழிற் சாலைகளில் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வீதம் 10 நாட்களுக்கு 80 மணி நேரத்திற்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்று உயர்கல்வி சேர்க்கைக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.