உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாற்றங்கால் அமைக்க தயக்கம் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா

நாற்றங்கால் அமைக்க தயக்கம் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் பன்றிகள் தொல்லையால் இந்தாண்டு நாற்றங்கால் அமைக்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனுார், மடப்புரம், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமான சம்பா பருவத்திற்கான நெல் நாற்றங்கால் அமைக்கும் பணியை முதல் கட்டமாக கிணற்று பாசன விவசாயிகள் ஆக.,ல் துவக்குவது வாழக்கம். இப்பகுதியில் என்.எல்.ஆர்., கோ 51, அட்சயா ஆர் 4 ரகங்களை சாகுபடி செய்வார்கள். ஏற்கனவே விதை நெல் வைத்துள்ள கிணற்று பாசன விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து விதை நெல் தூவி நாற்றுகள் ஒரு மாதத்திற்கு வளர்ப்பார்கள். தங்களது தேவை போக எஞ்சிய நாற்றுக்களை மற்ற விவசாயிகளுக்கு வழங்குவார்கள். ஆக., ல் மழை பெய்யும். கடந்த ஆண்டுகளில் ஆக., மாதங்களில் (2023) 245.6 மி.மீ., (2024) 343.6 மி.மீ., மழை பதிவான நிலையில் 2025ல் இதுவரை 161.4 மி.மீ., மட்டுமே பதிவானது. இருப்பினும் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்வு, வைகை அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் நெல் நடவுக்கு தயாராகி வருகின்றனர். இத்தாலுகாவில் 2023 ல் நெல் நடவு 3409 எக்டேரில் இருந்து, 2024ல் 2290 எக்டேராக குறைந்ததற்கு, பன்றிகள் தொல்லையே ஒரு காரணமாக கூறுகின்றனர். விவசாயிகள் கூறியதாவது, பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து மலைப்பகுதியில் விடவேண்டும். நாற்றாங்கால் அமைக்க ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவிடுகிறோம். இரவில் பன்றிகள் நாற்றாங்காலை சேதப்படுத்திவிடுகிறது. கடந்தாண்டு சாகுபடி குறைந்ததற்கு பன்றிகள் சேதப்படுத்தியதும் காரணம் தான். இதற்கு அரசு இழப்பீடும் வழங்குவதில்லை. இதனால் நிலத்தடி நீர், விதை நெல் இருந்தும் நாற்றங்கால் அமைக்க முடியாமல் தாமதம் செய்கிறோம், வனத்துறையினர் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை