உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் மத்திய வனத்துறை கிரீன் சிக்னல்

ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் மத்திய வனத்துறை கிரீன் சிக்னல்

தென்காசி:தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் ராம நதி, கடனா நதி அணைகள் உள்ளன. இந்த பகுதியில் ஜம்புநதி கால்வாய் வாயிலாக கடையம், கீழப்பாவூர், ஆலங்குளம் வட்டாரத்தில், 4,050 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.இருப்பினும், ஜம்பு நதி கால்வாயில் போதிய நீர்வரத்து இல்லாததால் ராமநதி அணை நிரம்பும் போது, உபரி நீரை ஜம்புநதி கால்வாயில் திருப்பி விடும் மேல்மட்ட கால்வாய் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியின் போது ஜெயலலிதா, 110வது விதியின் கீழ் ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்ட ஆய்வு பணிக்கு, 40 லட்சம் ரூபாய், நிலம் கையகப்படுத்த, 5 கோடி ரூபாய் 2015ல் ஒதுக்கினார். ஆனால், அதன் பிறகும் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த வனப்பகுதி களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் இருப்பதால் வனத்துறையும் அனுமதி மறுத்தது.தற்போது தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, மாநில வன உயிரின நல வாரியக் குழு வாயிலாக மத்திய வனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மத்திய வனத்துறை தற்போது மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.கால்வாய் திட்டத்துக்கு, 'நபார்டு' வங்கி நிதி, 41.08 கோடியுடன் தமிழக அரசும், 21 கோடி ரூபாய் வழங்கியுள்ளதால், பணிகள் ஜரூராக துவங்கிஉள்ளன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, நாராயணப்பேரிகுளம், குத்தாலப்பேரிகுளம் ஆகிய அணைக்கட்டுகள் வாயிலாக, 25 குளங்களால், 4,050 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி கிடைக்கும்.ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டு குழு அமைப்பாளர் ராம உதயசூரியன் கூறியதாவது:கடையம், கீழப்பாவூர், ஆலங்குளம் பகுதி வளம் பெற இத்திட்டம் கைகொடுக்கும். தற்போது, 84 அடி உயர ராமநதி அணையில் 82 அடி நீர்மட்டத்தை எட்டும் போது உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அப்போது, 78 அடிக்கு நீர் மட்டம் வரும் பட்சத்தில், உபரி தண்ணீர் ஜம்புநதி கால்வாய் திட்டத்தில் திருப்பி விடப்படும். 10 நாட்கள், 200 கன அடி வீதம் திருப்பி விடப்படும்.தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்களிலும், அணை நிரம்பும் போதெல்லாம் உபரி நீர் திருப்பி விடப்படுவதன் வாயிலாக இந்த பகுதி விவசாயம் பயன்பெறும். 8 கி.மீ., துாரம் கால்வாய் தோண்டும் பணிகள் ஓராண்டுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை