| ADDED : செப் 23, 2011 01:16 AM
கும்பகோணம்: கும்பகோணம் அருகே முன்விரோதத் தகராறில் ஈடுபட்டு தனியார்
பாலிடெக்னிக் மாணவர்களை கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த மூன்று
பேரை போலீஸார் கைது செய்தனர். 11 பேரை தேடி வருகின்றனர். கும்பகாணம் அருகே
திருச்சிற்றம்பலம் கீழத்தெருவை சேர்ந்த செல்வம் என்பவரது மகன்
கொளஞ்சிநாதன்(19). இவர் ஜெயங்கொண்டம் பாலிடெக்னிக் கல்லூரியில்
இரண்டாமாண்டு படிக்கிறார். இவருக்கும் ஆத்தூர் பகுதியை சேர்ந்த
ஸ்ரீதருக்கும் கல்லூரி பஸ்ஸில் செல்லும்போது வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஸ்ரீதர், விமல்ராஜ், முரளி, கார்த்திக்
மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் கம்பி, மரக்கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களுடன்
நெய்குப்பை அருகே வந்த கல்லூரி பஸ்ஸை நிறுத்தி பஸ்ஸிலிருந்த கொளஞ்சிநாதன்,
ஆனந்தராஜ் இருவரையும் கட்டையால் அடித்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல்
விடுத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் கும்பகோணம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்தியால்
குத்திக்கொலை மிரட்டல் விடுத்த ஸ்ரீதர், விமல்ராஜ், கார்த்திக் ஆகிய மூவரை
பந்தநல்லூர் போலீஸார் கைது செய்தனர். மேலும் முரளி உள்ளிட்ட 11 பேரை
போலீஸார் தேடி வருகின்றனர்.