| ADDED : ஏப் 26, 2024 01:06 AM
சின்னமனுார் : சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர்,சிவகாமியம்மன் கோயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் உள்ளதால் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.சின்னமனூர் பூலாந்தீஸ்வரர்,சிவகாமியம்மன் கோயில் வரலாற்று சிறப்பு பெற்ற தலமாகும். பூலாநந்தீஸ்வரர் சுயம்புவாக எழுந்தருளியது சிறப்பாகும். இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் 2007 ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி,கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகமவிதி. ஆனால் 15 ஆண்டுகளை கடந்தும் கும்பாபிேஷகம் நடைபெறவில்லை. 2022 ல் அதற்கான பணிகள் முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள் மூலம் துவங்கியது. திருப்பணிகள் தொல்லியல்துறை வழிகாட்டுதல்கள்படி மேற்கொள்ளப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதாக கூறினர். ஆனால் என்ன காரணத்திற்காக இதுவரை கும்பாபிஷேகம் நடத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர் என பொதுமக்களும், இறையன்பர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த பணிகளின் போது பூலாநந்தீஸ்வரர் கோயில் சுற்றுச்சுவரில் உள்ள புராதன சிற்பங்கள், கல்வெட்டுகள் சேதப்படுத்தப்பட்டதாக கடந்த 6 மாதங்களுக்கு முன் ஹிந்து முன்னணியினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.ஆனால் ஹிந்து அறநிலைய துறை இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தது. தொல்லியல்துறையின் வழிகாட்டுதல்படிதான் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியது. திருப்பணிகள் செய்து வரும் உபயதாரர்கள் பெரும்பாலும் பணியை நிறைவு செய்துள்ளனர். ஆனால் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்துவருகிறது. உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.