| ADDED : ஆக 06, 2024 05:41 AM
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே உப்புத்துறை மலைப்பாதை வழியாக விருதுநகர் மாவட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்ற பக்தர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பினர். இக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேனியில் இருந்து உப்புத்துறை வரை இயக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அரசு சிறப்பு பஸ்களில் மலைப்பாதை வரை சென்றனர். வருஷநாடு, மேகமலை, கண்டமனூர் வனத்துறையினர் யானைகஜம் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து கோயிலுக்கு சென்ற பக்தர்களிடம் பாலித்தீன், தீப்பெட்டி, பீடி, சிகரெட் ஆகியவற்றை பறிமுதல் செய்து அனுப்பினர். உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களுக்கு மட்டும் அனுமதி வழங்கினர். வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே மலைப்பாதை வழியாக கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வனவிலங்கு நடமாட்டம் அதிகம் உள்ள வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று திரும்பியதால் கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். கோயிலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மதியம் வரை பாதுகாப்பாக வருஷநாடு சென்று பின் அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பாதுகாப்பாக திரும்பினர்.