| ADDED : ஜூன் 25, 2024 12:13 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே விவசாய நிலங்களில் உழவுப் பணிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி, இறவை பாசனத்தில் விவசாயம் நடந்து வருகிறது. ஜூலை, ஆகஸ்ட், செப்., மாதங்களில் கிடைக்கும் பருவ மழையை பயன்படுத்தி மானாவாரி நிலங்களில் சிறு தானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் விதைப்பு செய்வர். இதே போல் இறவை பாசன நிலங்களில் சீசனுக்கு தக்கபடி காய்கறிகள், நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்வர். கடந்த சில மாதங்களில் நிலவிய கோடையில் விவசாய பரப்பு குறைந்து பணிகள் முடங்கி கிடந்தது. இந்நிலையில் சமீபத்தில் அடுத்தடுத்து பெய்த மழையால் மண்ணின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி தற்போது விவசாயிகள் அடுத்த விதைப்பு மற்றும் நடவுக்கு நிலங்களில் உழவுப் பணி மேற்கொண்டுள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: சமீபத்தில் பெய்த மழையால் ஆண்டிபட்டி பகுதியில் தற்போது பாசனக் கிணறுகள், போர்வெல்களில் நீர் இருப்பு போதுமான அளவு உள்ளது.பருவ மழையை கணக்கில் கொண்டு விவசாயிகள் அடுத்த சாகுபடிக்கு நிலங்களை தயார் படுத்தி வருகின்றனர். உழவு பணிகளை தொடர்ந்து நிலங்களை உலரவிடுவதாலும், இயற்கை உரம் இடுவதாலும் மண்ணின் வளம் அதிகரித்து விளைச்சலும் கூடும். இவ்வாறு தெரிவித்தனர்.