உயரம் குறைந்த சென்டர் மீடியனால் விபத்து அபாயம்
தேனி : தேனி மாவட்டத்தில் தேசிய நெடுங்சாலைகளில் உயரம் குறைவான சென்டர் மீடியன்களை கடக்கும் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை தேனி மாவட்டத்தில் போடி மெட்டு முதல் ஆண்டிபட்டி வரை உள்ளது. இதில் போடி, தேனி, ஆண்டிப்பட்டி நகர் பகுதிகள் வழியாக தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் தேனி மதுரை ரோட்டில் இரண்டரை அடி உயரத்தில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பழனிசெட்டி போலீஸ் ஸ்டேஷன் முதல் போடி விலக்கு வரை, தேனி வேளாண் பொறியியல் அலுவலகம் முதல் கருவேல் நாயக்கன்பட்டி வரை அரையடி உயரத்திற்கும் குறைவாக உள்ளது. சில பகுதிகளில் ரோட்டிற்கு இணையான உயரத்தில் சென்டர் மீடியன்கள் உள்ளன.இதனால் வாகன ஓட்டிகள் பின்னால் வாகனங்களை கவனிக்காமல் உயரம் குறைந்த சென்டர் மீடியன்கள் வழியாக வாகனங்களை ரோட்டை கடந்து செல்வது அதிகரித்துள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் சென்டர் மீடியன் உயரம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.