மிளகாய், தக்காளி, கத்தரி நர்சரி அமைக்க நடவடிக்கை தேவை
கம்பம்: ''நாற்றுகள் வாங்குவதற்கு 50 கி.மீ. வரை பயணம் செய்வதை தவிர்த்து விவசாயிகள் கம்பம், சின்னமனுார் பகுதியில் வாங்கிக் கொள்ள ஏதுவாக, தோட்டக்கலைத்துறை கம்பம் அல்லது சின்னமனுாரில் நர்சரி ஒன்றை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டம் தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு காய்கறி பயிர்கள், பழப்பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் மானியமாக வழங்கப்படுகின்றன. இந்த நாற்றுகளை வாங்குவதற்கு கூடலுார், கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி, புதுப்பட்டி, கூடலூர், கம்பம், சின்னமனுார் வட்டாரங்களில் உள்ள விவசாயிகள், பெரியகுளம் தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல வேண்டும. அவ்வாறு செல்ல குறைந்தது 50 கி.மீ பயணம் செய்ய வேண்டும். அத்துடன் நாற்றுகளை எடுத்து வர வாகனங்களை கொண்டு செல்ல வேண்டும். வாடகை ரூ.3 ஆயிரம் வரை ஆகும்.இதனால் விவசாயிகள் அவதிப்பட்டனர். விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சின்னமனுார் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பசுமைக் குடிலில் நர்சரி ஒன்றை அமைக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டது. அப்பணிகள் நடக்க வில்லை. கம்பம், சின்னமனுார் நுகர்பொருள் வாணிப கிட்டங்கி வளாகங்களில் போதிய அளவு காலி இடம் உள்ளது. அங்கு தோட்டக்கலைத் துறையினர் நர்சரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.