உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததால் கேள்விக்குறியாகும் விவசாயம் ஜம்புலிப்புத்துார் விவசாயிகளுக்கு இந்த ஆண்டும் ஏமாற்றம்

கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததால் கேள்விக்குறியாகும் விவசாயம் ஜம்புலிப்புத்துார் விவசாயிகளுக்கு இந்த ஆண்டும் ஏமாற்றம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், ஜம்புலிப்புத்தூர் கண்மாய்க்கு மழைநீர் வந்து சேராததால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் கேள்விக்குறியாகிறது. கண்மாயை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைவதால் பல ஏக்கர் விளை நிலங்கள் தரிசாக மாறியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் நாகலாறு ஓடையில் வரும் நீர், சங்கிலித்தொடராக உள்ள தெப்பம்பட்டி, கோத்தலூத்து, பிச்சம்பட்டி, ஆசாரிபட்டி, கொத்தப்பட்டி, ரங்கசமுத்திரம், ஜம்புலிப்புத்தூர் கண்மாய்களில் தேங்கும். சில ஆண்டுகளாக மழை பெய்தும் கண்மாய்களுக்கு போதிய அளவில் நீர் வரத்து இல்லை. நாகலாறு ஓடையின் கடைசிப் பகுதியில் உள்ள ஜம்புலிப்புத்தூர் கண்மாய்க்கு நீர் வரத்து முற்றிலும் தடைபடுகிறது. பல ஆண்டுகளாக இக் கண்மாயில் நீர் தேங்காததால் இப் பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து இறவை பாசன பரப்பும் குறைந்து வருகிறது. கண்மாயின் நீர் தேங்காததால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுப்பணித்துறை, விவசாயத்துறைகளும் அக்கறை கொள்ளவில்லை. ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கண்மாய்களுக்கு குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து பெரியாறு அணை உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வந்து தேக்கும் திட்டம் நிறைவேற்ற விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அதற்கான பலன் தான் கிடைக்கவில்லை. கண்மாய் நிலவரம் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

தடுப்பணையால் நீர்வரத்து இல்லை

ராஜபாண்டி, ஸ்ரீரெங்காபுரம்: ஜம்புலிப்புத்தூர், லட்சுமிபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டி, ஸ்ரீரங்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு இக்கண்மாய் நீர் ஆதாரமாக உள்ளது. 1986ல் எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இக்கண்மாயை தொடர்ந்து பராமரிக்கவில்லை. தற்போது சீமை கருவேல மரங்கள் புதர்போல் வளர்ந்து கண்மாயின் நீர் தேக்கப் பரப்பை மூடிவிட்டது. இவற்றை அகற்றும் நடவடிக்கை இல்லை. சண்முகசுந்தரபுரம் அருகே ரூபாய் ஒரு கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்ட பின் நாகலாறு ஓடை நீர் ஜம்புலிப்புத்தூர் கண்மாய்க்கு வருவதே இல்லை. பொதுப்பணி துறையும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

கிணறுகளில் நீர் சுரப்பு குறைவு

ஈஸ்வரன், சக்கம்பட்டி: இக் கண்மாய் நீரைப் பயன்படுத்தி 100 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் ஒருபோகம் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது கண்மாயிலிருந்து வரும் பாசனக்கால்வாய் எங்கு உள்ளது என்று தெரியவில்லை. கண்மாயின் கிழக்கு பகுதியில் நீர் வெளியேறும் மதகும் சேதமடைந்து விட்டது. கண்மாயில் நீர் தேங்காததால் பாசன கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது. இடுபொருட்கள் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயத்தை தொடர முடியாமல் பலரும் ஏற்கனவே தவிக்கின்றனர். இந்நிலையில் நீர் பற்றாக்குறையை அரசு கண்டு கொள்ளவில்லை. விவசாயிகள் பலரும் இத் தொழிலை கைவிட்டு மாற்று தொழிலுக்கு செல்கின்றனர். கண்மாயில் நீரை தேக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முதல்வர் உறுதியளித்தும் நடவடிக்கை இல்லை

சுப்புராஜ், லட்சுமிபுரம்: கண்மாய் ஒரு முறை நிரம்பினால் மூன்றாண்டுகளுக்கு இப் பகுதியில் இறவை பாசனம் தொடரும். கண்மாயை முழுமையாக ஆய்வு செய்து நீர் வரத்து கால்வாய், நீர்த்தேக்க பரப்பு பராமரித்து மழைநீர் தேக்க வேண்டும். கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இப்பகுதி விவசாயிகள் முறையிட்ட போது கண்மாய்க்கு நீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்தார். நடவடிக்கைதான் இல்லை. குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து பெரியாறு அணை உபரிநீரை குழாய் மூலம் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை