| ADDED : ஜன 23, 2024 05:04 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வாரச்சந்தை வளாகத்தில் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு திங்கட்கிழமை கூடும் ஆண்டிபட்டி வார சந்தைக்கு 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் 5000க்கும் ஏற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள்,முதல் நாள் இரவே சந்தை வளாகத்தில் தங்கி விடுகின்றனர். மறுநாள் சந்தை முடித்து செல்வதற்கு இரவு நீண்ட நேரம் ஆகிறது. சந்தை வளாகத்தில் போதுமான தெரு விளக்கு வசதிகள் இல்லை. வளாகத்தில் பல இடங்களில் அள்ளப்படாத குப்பை, புதர் மண்டியுள்ள செடி கொடிகளால் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது.மழை, வெயில் காலத்தில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பான ஷெட் இல்லை. பொதுக்கழிப்பறை வசதி இல்லை.வாரச்சந்தை வளாகத்தில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக குளியல் அறையுடன் கூடிய நவீன சுகாதார வளாகம் அமைக்கவும், வாரச்சந்தை வளாகத்தை தூய்மை பகுதியாக பராமரிக்கவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.