தேனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பம்பாவிற்கு நேரடி பஸ் வசதி தேவை ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை
தேனி: சென்னையில் இருந்து தேனிக்கு ரயில் மூலம் வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஸ்டேஷனில் இருந்து நேரடியாக பம்பா செல்லும் வகையில் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் செல்ல துவங்கி உள்ளனர். இதில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் தேனி வழியாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது சென்னையில் இருந்து போடி வரை வாரத்திற்கு மூன்று நாட்கள் இயங்கும் ரயிலில் தேனி வந்து பஸ்சில் சபரிமலை செல்கின்றனர். இதற்காகதேனியில் இருந்து குமுளி சென்று, பின் அங்கிருந்து பம்பா விற்கு மற்றொறு பஸ் என இரு பஸ்கள் மாறி சபரிமலை செல்லும் நிலை உள்ளது.அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நேரடியாக பம்பா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து ரயிலில் தேனி வரும் பக்தர்கள் தேனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நேரடியாக பம்பா செல்லும் வகையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்க வேண்டும். மேலும் பக்தர்கள் வருகையை கணக்கில் கொண்டு சென்னையில் இருந்து தேனி, போடிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.