விலை குறைவால் பீட்ரூட் சாகுபடி விவசாயிகள் பாதிப்பு
ஆண்டிபட்டி: 'பீட்ரூட்' விலை திடீரென்று குறைந்ததால் ஆண்டிபட்டி பகுதியில் விளைவித்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் வெள்ளையத்தேவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி பகுதியில் விவசாயிகள் சிலர் 'பீட்ரூட்' சாகுபடி செய்துள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட செடிகளில் தற்போது கிழங்குகள் எடுக்கப்படுகிறது. கடந்த சில நாட்களில் பீட்ரூட் விலை தொடர்ந்து குறைந்து தற்போது கிலோ ரூ.10 முதல் 15 வரை உள்ளது. வியாபாரி பாலமுருகன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் தேவாரம் உத்தமபாளையம், சின்னமனுார், ஆண்டிபட்டி பகுதிகளில் பீட்ரூட் சாகுபடியாகிறது. தற்போது தினமும் 10 டன் அளவிலான பீட்ரூட் சின்னமனுார், தேனி, சென்னை, மதுரை பகுதி காய்கறி மார்க்கெட்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது பனி குறைந்து வெப்பம் துவங்கியுள்ளதால் பீட்ரூட் விளைச்சல் அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் பீட்ரூட் விலை கிலோ ரூ.60 வரை இருந்ததால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. தற்போது விலை குறைந்துள்ளதால் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.