தேனி: மாவட்டத்தில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி 28 இடங்கள், ஸ்ரீவிலிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் 28 இடங்கள் என, மொத்தம் 56 இடங்களில் நடந்தது. இக்கணக்கெடுப்புப் பணிகள் நேற்று முன்தினம் இரவு, நேற்று காலை நடந்தது. வனத்துறை சார்பில் செங்குளத்துப்பட்டி கண்மாய், பெரியகுளம் தாமரைகுளம், குள்ளப்புரம் கண்மாய், ராஜபூபாலசமுத்திரம், போடி, டொம்புச்சேரி அம்மன்குளம், தேனி தாமரைகுளம், வைகை அணை பகுதி உள்ளிட்ட 28 இடங்களில் நடந்தன. மேகலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டு 28 இடங்களில் நடந்தது. மாவட்டத்தில் 56 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விவேக்குமார் கண்காணிப்பில் நடந்தது. பணிகளை காப்பக உதவி வன அலுவலர் சாய்சரண், வனத்துறை சார்பில் ரேஞ்சர் அருள்குமார், வனவர் திவ்யா ஒருங்கிணைத்தனர். மாவட்டம் முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். வைகை அணைப் பகுதியில் காலை நடந்த கணக்கெடுப்புப் பணியில் ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார், தேனி நலம் பல்நோக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜ்குமார், ஊர் காவல்படை வட்டார தளபதி அஜய் கார்த்திக், தன்னார்வலர்கள், வனத்துறையினர் ஈடுபட்டனர்.கணக்கெடுப்பில் பர்பிள் சன்பேர்டு, நீல வாள் குருவி, பாம்புதாரா, ஸ்பாடல் டவ், மரங்கொத்தி, நெல் வயல் பிப்பிட், உள்ளான், கிரேஹீரோன், வால் குருவி, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் கணக்கிடப்பட்டன.