வனக்காப்பாளர் குடியிருப்புகள் சேதம்
போடி : போடி வனத்துறை அலுவலகத்தில் வன காப்பாளர்களுக்கான குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கட்டடம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.போடி வனச்சரத்திற்கு உட்பட்ட வனச்சாவடி, செக்போஸ்ட்களில் பணி புரியும் வனக்காப்பாளர்கள் தங்கும் வகையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடி வனத்துறை அலுவலகத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. சில ஆண்டுகள் மட்டும் பயன் படுத்தப்பட்ட நிலையில் உரிய பராமரிப்பு இல்லாததால் கட்டடம் முழுவதும் சேதம் அடைந்து உள்ளன. கட்டடம் இடிந்து விழுவதால் வனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். சேதம் அடைந்த வனக்காப்பாளர் குடியிருப்புக்கான கட்டடத்தை சீரமைக்க வேண்டும். அல்லது இடித்து விட்டு புதிதாக குடியிருப்புகள் கட்ட மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.