சேதம் அடைந்த கண்மாய் தடுப்பு ச்சுவர் - டொம்புச்சேரி ரோட்டில் விபத்து அபாயம்
போடி: அம்மாபட்டி - டொம்புச்சேரி செல்லும் ரோட்டில் வைரவன் கண்மாய் கரை தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடியில் இருந்து மீனாட்சிபுரம், விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் வழியாக டொம்புச்சேரி செல்வதற்கு ரோடு, பஸ் வசதி உள்ளது. அம்மாபட்டியலில் இருந்து டொம்புச்சேரிக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் மக்கள் ஒரு கி.மீ., கடந்து மேலச் சொக்கநாதபுரம், மீனாட்சிபுரம் வழியாக டொம்புச்சேரிக்கு சென்று பயணம் செய்கின்றனர்.மாற்றுப் பாதையாக அம்மாபட்டியில் இருந்து நேரடியாக டொம்புச்சேரிக்கு செல்ல ரோடு வசதி உள்ளது. பஸ் வசதி இல்லாததால் டூவீலர், கார்களில் சென்று வருகின்றனர். அம்மாபட்டி - டொம்புச்சேரி ரோட்டில் வைரவன் கண்மாய் அமைந்துள்ளது. ஓராண்டிற்கு முன் பெய்த கன மழையால் ரோட்டோரம் கண்மாய் ஒட்டிய தடுப்புச்சுவர் சேதம் அடைந்து பள்ளமாக மாறி சேதமடைந்தது. தடுப்புச் சுவரை சீரமைக்க விவசாயிகள், பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.இதனால் விளை பொருட்களை டெம்போ, மினிலாரி, டிராக்டர் மூலம் கொண்டு செல்லவும், டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் கண்மாய் கரை தடுப்புச் சுவரை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.