உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி  கோயிலில் அன்னதானம் என தனிநபர்கள் வசூல் வேட்டை அதிகாரிகள் அலட்சியத்தால் பக்தர்கள் அவதி

வீரபாண்டி  கோயிலில் அன்னதானம் என தனிநபர்கள் வசூல் வேட்டை அதிகாரிகள் அலட்சியத்தால் பக்தர்கள் அவதி

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சிலர் அன்னதானம் வழங்குவதாக கூறி பணம் வசூலில் ஈடுபடுகின்றனர். இதனை அறநிலைத்துறையினர் கண்டு கொள்ளாததால் பக்தர்கள் அவதியடைகின்றனர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்திரை திருவிழா, சபரி மலை சீசன் காலங்களில் தினமும் ஏராளமான தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.இந்த சூழலை பயன்படுத்தி பக்தர்கள் வெளிவரும் வடக்கு வாசல் அருகே நின்றிருந்த மூன்று பேர் பக்தர்களுக்கு அவர்கள் கொண்டு வந்த தீர்த்தம், சிறிய சுவாமி படங்களை வழங்கி வேறு மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் பெயரை கூறி அன்னதானத்திற்கு பணம் கேட்கின்றனர். தயங்குபவர்களிடம் உங்களிடம் இருப்பதை தாருங்கள் என கட்டாய வசூலில் ஈடுபட்டனர். வாட்டர் கேனில் கொண்டு வந்த தீர்த்தம், படங்களை மாலை வரை வழங்கினர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் இதனை இக் கோவில் நிர்வாகம் தான் வசூல் செய்கிறது என நினைத்து சிலர் பணம் வழங்கினர். சிலர் வேண்டா வெறுப்பாக பணத்தை கொடுத்து சென்றனர். வசூலித்த பணத்திற்கு ரசீது வழங்கப்படவில்லை. இச்சம்பவம் பற்றி அறநிலைத்துறை கோயில் செயலர் மாரிமுத்துவை தொடர்பு கொண்டபோது அவர் அலட்சியமாக பேசி பதில் கூற மறுத்துவிட்டார்.அறநிலைத்துறை உதவி ஆணையர் கலைவாணன் கூறுகையில், 'கோயிலில் மற்றவர்கள் வசூலில் ஈடுபடுவது தவறாகும். இச்சம்பவம் பற்றி விசாரிக்கப்படும். வசூலில் ஈடுபட்டவர்கள் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். தொடர்ந்து இதுபோன்று வசூலித்தால் போலீசில் புகார் கொடுக்க கோயில் அலுவலர்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ