அரசு பஸ்களில் காட்சி பொருளான டிஜிட்டல் போர்டு
தேனி: மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் முன்புறம் உள்ள டிஜிட்டல் போர்டுகள் பராமரிப்பு இன்றி காட்சி பொருளாக உள்ளன. இதனால் பஸ்கள் எங்கு செல்கிறது என தெரியாமல் பயணிகள் அவதிக்கு உள்ளாகுகின்றனர். சில ஆண்டுகளாக அரசு பஸ்களில் எந்த ஊர் செல்கிறது என தெரிவிக்க டிஜிட்டல் போர்டு பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெளியூருக்கு இயக்கப்படும் பஸ்களில் டிஜிட்டல் போர்டுகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் பல போர்டுகள் காட்சி பொருளாக உள்ளன. சில போர்டுகளில் எழுத்துக்கள் சரிவர தெரிவதில்லை. போர்டுகள் செயல்படாத பஸ்களில் சில நடத்துனர்கள் பேப்பரில் எழுதி கண்ணாடிகளில் ஒட்டுகின்றனர். இது பயணிகளுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால் பஸ்கள் எந்த ஊர்களுக்கு இயக்கப்படுகிறது என தெரியாமல் பயணிகள் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. டிஜிட்டல் போர்டுகளை பராமரித்து அவை சரியாக இயங்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.