திருமணமான ஒரு வாரத்தில் வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட மூவர் மீது வழக்கு
பெரியகுளம்:தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் திருமணமாகி ஒருவாரத்தில் மனைவி ராஜ்ஸ்ரீயிடம் வரதட்சணையாக 25 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் அனந்தராம் 33, மாமியார் மகாலட்சுமி 58, சின்ன மாமியார் சகுந்தலா 57, மீது பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.லட்சுமிபுரம் லட்சுமி நாராயண நகரைச் சேர்ந்த சரவணக்குமார் மகள் ராஜ் ஸ்ரீ 30. தேனி கே.ஆர்.நகர் ராமசாமி மகன் அனந்தராம் 33. இவர் கனடாவில் பொறியாளராக பணி புரிந்து அந்நாட்டின் குடியுரிமை வைத்துள்ளார். இதனை மறைத்து 2024 டிச., 5 ல் ராஜ் ஸ்ரீயை திருமணம் செய்தார். திருமணத்திற்கு 30 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.திருமணமாகி 7 வது நாள் டிச.,11ல் அனந்தராம் தொழில் துவங்க வேண்டும். எனவே,'உனது பெற்றோரிடம் கூடுதலாக 25 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் வரதட்சணையாக வாங்கி வருமாறு' ராஜ் ஸ்ரீயிடம் தெரிவித்தார். அவர் மறுக்கவே அனந்தராம், அவரது தாயார் மகாலட்சுமி, சித்தி சகுந்தலா ராஜ்ஸ்ரீ யை கொடுமைப்படுத்தினர்.இதனால் ராஜ் ஸ்ரீ கோபித்துக்கொண்டு லட்சுமிபுரத்தில் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். டிச.,22ல் அனந்தராம் உட்பட மூவரும் லட்சுமிபுரம் வந்து ராஜ் ஸ்ரீ யிடம், நாங்கள் கேட்ட வரதட்சணை கொடுக்காவிட்டால், உன்னை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளனர். ராஜ்ஸ்ரீ புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, அனந்தராம் உட்பட மூவர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.