பணிக்கொடை வழங்காததால் தேர்தல் பணி அலுவலர்கள் புலம்பல்
கம்பம் : லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து 7 மாதங்கள் ஆகியும் பணியாற்றிய அலுவலர்களுக்கு இன்னமும் பணிக்கொடை வழங்கவில்லை என புலம்புகின்றனர்.லோக்சபா தேர்தல் கடந்த ஏப். 19 ல் நடந்தது. அதற்கு முந்தைய மார்ச் முதல் வாரமே ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் மூன்று பறக்கும் படை, இரண்டு நிலைக்கண்காணிப்பு குழு, இரண்டு வீடியோ குழு, செலவினங்களை கண்காணிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டது. இந்த குழுக்களின் பணி ஏப். 20 ல் நிறைவடைந்தது. பறக்கும் படை மட்டும் கேரள தேர்தல் காரணமாக கூடுதலாக 10 நாட்கள் பணி செய்தனர். இவர்கள் தவிர தேர்தல் நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் உள்ளனர். ஒட்டுப் பெட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் பணி செய்தவர்கள், வாகனங்களை ஒட்டிய டிரைவர்களும் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும், பணி காலத்திற்குரிய பணிக்கொடை இன்னமும் வழங்கப்படவில்லை.ஒவ்வொருவரிடமிருந்தும் வங்கி பாஸ் புக் மற்றும் பே சிலிப் விபரங்களை தருமாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 2 மாதங்களுக்கு முன்பே கேட்டு வாங்கினர். அடிப்படை சம்பளத்தை வைத்தே தேர்தல் பணிக்கான சம்பளம் தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை பணிக்கொடை வழங்கவில்லை. இதற்கிடையே பணிக்கொடை நிர்ணயம் செய்வதில் குளறுபடிகள் செய்திருப்பதாக தேர்தல் பணியாற்றிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக பறக்கும் படையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 44 நாட்கள் பணி செய்தோம். ஒரு நாளைக்கு ரூ.1200 நிர்ணயம் செய்தார்கள். மொத்தம் ரூ.52,800 வழங்க வேண்டும். ஆனால் 'கன்சாலிடேட் பே' என்று கூறி ரூ.24 ஆயிரம் தருவதாக கூறுகின்றனர். ஸ்ட்ராங் ரூமில் பணி செய்தவர்களுக்கும், வாகனங்களை ஒட்டிய டிரைவர்களுக்கும் பணிக்கொடை நிர்ணயம் செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது . இதனால் அவர்களும் கொந்தளிப்பில் உள்ளனர். கலெக்டர் ஷஜீவனா தேர்தல் பணிக்கொடை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.