துணை மின் நிலையங்கள் பராமரிப்பு செய்ய மின்வாரியம் நடவடிக்கை தேவை
கம்பம் : துணை மின் நிலையங்களில் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை பராமரிப்பு செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேனி மாவட்டத்தில் 15 க்கும் மேற்பட்ட ஊர்களில் துணை மின் நிலையங்கள் உள்ளன. இதில் வண்ணத்தி பாறை, உத்தமபாளையம், ராசிங்காபுரம், காமாட்சிபுரம், மதுராபுரி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல துணை மின் நிலையங்கள் மிக பழமையானவை. டவர் மின் பாதையில் இருந்து மின்சாரம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வோல்ட்டாக துணை மின் நிலையத்தில் உள்ள பவர் டிரான்ஸ்பார்மருக்கு வரும். பவர் டிரான்ஸ்பார்மர் அதை 22 ஆயிரம் கிலோ வோல்ட்டாக மாற்றி, நகரில் உள்ள டிரான்ஸ்பார்மர்களுக்கு அனுப்பும். டிரான்ஸ்பார்மர்களில் இருந்து வீடுகளுக்கு 230 வோல்ட்டாக குறைத்து வழங்கும்.மாதந்தோறும் ஒரு நாள் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பணியாளர்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்கின்றனர். ஆனால் துணை மின் நிலையங்களுக்குள் பராமரிப்பு பணி மேலோட்டமாகவே நடைபெறும்.பழமையான துணை மின் நிலையங்களில் பிரேக்கர்களை புதுப்பிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர். அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதா என தெரியவில்லை. துணை மின் நிலையங்களில் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர்கள் இதயமாக கருதப்படும் பேட்டரி அறையில் உள்ள பேட்டரிகள் என்ன நிலையில் உள்ளது என முறையான ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும்.அப்போது தான் நகரில் மின் சப்ளை தடங்கல் இன்றி கிடைக்கும்.மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, வேளாண் இணைப்புகளை தனியாக பிரிக்க ரூ.50 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. இதில் துணை மின் நிலையங்களின் பராமரிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் பிரேக்கர்கள் புதுப்பிக்கப்பட்டது. பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்படும். இதே போன்று அனைத்து துணை மின்நிலலயங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.