உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அறுவடை இயந்திரங்கள் பொறியியல் துறை வாடகைக்கு வழங்க வலியுறுத்தல்

அறுவடை இயந்திரங்கள் பொறியியல் துறை வாடகைக்கு வழங்க வலியுறுத்தல்

கம்பம் : நெல் அறுவடைக்கு தேவைப்படும் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு வழங்க வேளாண் பொறியியல் துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நெல் அறுவடைக்கு விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இதற்காக டெல்டா மாவட்டங்களிலிருந்து இயந்திரங்கள் வாடகைக்கு வந்தன. மழை காலங்களிலும் பிரச்னையின்றி அறுவடை நடந்தது. எனவே விவசாயிகள் இயந்திர அறுவடையை மட்டுமே தற்போது மேற்கொள்கின்றனர்.கடந்தாண்டு ஒரு மணி நேரத்திற்கு அறுவடை கட்டணமாக ரூ.2800 வசூலிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 60 முதல் 70 சென்ட் நிலத்தில் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. மழை மற்றும் காற்று காரணமாக கதிர்கள் தரையில் சாய்ந்திருந்தால், அறுவடை கட்டணம் இரண்டு மடங்காகும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 வசூலிக்கப்பட்டது.விவசாயிகள் கூறுகையில், இயந்திரங்கள் மூலம் அறுவடை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இயந்திரம் இல்லையென்றால் அறுவடைக்கு தொழிலாளர்களை தேட வேண்டும். களத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த பிரச்னை இல்லாமல் எளிதாக அறுவடை மேற்கொள்ள இயந்திரங்கள் பயன்படுகிறது. எனவே அறுவடை இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ